கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலின் செல்லப்பிள்ளைகள்! – அவர்களைப் பிரிக்கவே முடியாது என்கிறார் மஹிந்த

“சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். அவர்களை ரணிலிடம் இருந்து ஒருபோதும் பிரித்தெடுக்கவே முடியாது. அதனால்தான் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் ரணிலின் தலையை மீண்டும் காப்பாற்றியுள்ளனர்.”

– இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவில்தான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி, தோல்வி தங்கியுள்ளது என்று நான் ஏற்கனவே தெரிவித்திருத்தேன். அதற்கமைய எல்லாம் நடந்து முடிந்துள்ளது.

பிரேரணை தொடர்பில் ரணிலுடன் அவரின் செல்லப்பிள்ளைகளான கூட்டமைப்பினர் பல தடவைகள் பேச்சுகள் நடத்துவது போல் பாசாங்கு செய்துவிட்டு அவரின் தலையை மீண்டும் காப்பாற்றிவிட்டனர்.

பிரேரணையை கூட்டமைப்பினர் எதிர்ப்பார்கள் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். அதன்படி அவர்கள் செய்துள்ளார்கள். அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தீர்மானம் தோற்றாலும் இந்த அரசு கவிழ்வது உறுதி. அது விரைவில் நடக்கும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *