சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று சனிக்கிழமை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு – காந்திபூங்காவுக்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் இதுவரையில் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தொடர்ந்து தம்மை அரசு ஏமாற்றி வருகின்றது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இறுதிப் போரின்போது தமது பிள்ளைகளைக் கைகளினால் படையினரிடம் வழங்கிய போதிலும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இன்று தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லை எனவும், தம்மை அனைவரும் கைவிட்டதாக தாங்கள் உணர்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *