சீனப் பெண்ணின் வீட்டுக்குள் தாக்குதல்: நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் கைது!
ஐக்கிய தேசிய கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் நீர்கொழும்பு நகரில் வைத்து கட்டானப் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சீன நாட்டுப் பெண்ணொருவருக்கு சொந்தமான வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியமை மற்றும் அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையிட்டு சென்றமை ஆகிய முறைப்பாடுகளுக்கமைய அவர் பிரதான சந்தேகநபராகக் கைதுசெய்யபபட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் விஜித பெர்னாண்டோ நாளை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 5 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டானப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரொய்ஸ் விஜித பெர்னாண்டோ என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன் நீகொழும்பில் நகைக்கடை ஒன்றை கொள்ளையிட்டமை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுப் பிணையில் விடுதலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.