தேர்தலில் களமிறங்கும் விக்கி கட்டுக்காசை இழப்பது உறுதி! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்

“தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும். அதில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலைதான் ஏற்படும்.”

– இவ்வாறு அதிரடிக் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

நேற்றிரவு தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைக் கூறினார்.

அரசியல் தீர்வு கிடைக்காது விடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் என்ற சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என நேற்று கிளிநொச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் சுமந்திரன் எம்.பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆயினும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வாறான கருத்தை வெளியிடவேயில்லை என அடியோடு மறுத்தார் சுமந்திரன்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

“உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஆயினும், ஒக்டோபரில் அரசியல் சூழ்ச்சியை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவுத்தளம் வெகுவாக அதிகரித்துள்ளது.

அந்த நேரத்தில் கூட்டமைப்பு செயற்பட்ட விதம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்புக்கான ஆதரவு என்பது இப்போது அதிகரித்திருக்கின்றது.

தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும் அதில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்டாயம் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலைதான் ஏற்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *