திருமலை மாணவர் ஐவர் படுகொலை: அரச படையினர் 13 பேரும் விடுதலை! – நீதியை எதிர்பார்த்த உறவுகள் கவலை

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச படையினர் மீது தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர்கள் அனைவரையும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருந்த 12 விசேட அதிரடிப் படையினரும், ஒரு பொலிஸ் அதிகாரியும் என அரச படையைச் சேர்ந்த 13 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இம்மாணவர்கள் அன்றிரவு 7 மணியளவில் திருகோணமலை கடற்கரையில் – காந்தி சிலைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அரச படையினரால் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களாவர். இந்தச் சம்பவத்தில் மேலும் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.

மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா மற்றும் சண்முகராஜா கஜேந்திரன் ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர். .

இந்தக் படுகொலையை அரசும், இராணுவத்தினரும், பொலிஸாரும் ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்றும், அரச படைகள் மீது இவர்கள் கைக்குண்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கைக்குண்டு வெடித்து இவர்கள் பலியாகினர் என்றும் கூறினர்.

இருப்பினும் இறந்த மாணவர்களின் தலைகள் உட்பட உடல்களில் துப்பாக்கிச்சூடுகள் காணப்படுகின்றன எனவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் சட்ட மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இதனைப் புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையிட்ட ‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ திருகோணமலை செய்தியாளர் எஸ்.சுகிர்தராஜனும் சில நாட்களின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகள் ஆகியோருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாட்டில் புகலிடம் கோரினர்.

எனினும், மாணவர்களின் படுகொலை தொடர்பில் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகள் நீதி கோரி நீண்ட சட்டப் போராட்டம் நடத்தினர்.

சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜீகரின் தந்தை வைத்தியர் மனோகரன் ஐ.நா. மனித உரிமைகள் சபையிலும் சாட்சியமளித்திருந்தார்.

இந்தநிலையில், மாணவர்களின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 12 விசேட அதிரடிப் படையினரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013ஆம் ஆண்டு ஜுலை 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

எனினும், கைதுசெய்யப்பட்ட அனைவரும் 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

13 அரச படையினருக்கும் எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றால் ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. 36 பேர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டனர். அவர்களில் முக்கிய சாட்சிகள் 8 பேர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவில்லை. அவர்களில் இருவர் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தவர்களாவர். நேரடிச் சாட்சிகளான இவர்கள் இருவரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக சுவிஸ் மற்றும் இலண்டனில் அடைக்கலம் கோரி தஞ்சம் புகுந்துள்ளனர்.

இலங்கையின் நீதிப்பொறிமுறை குறித்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த விவகாரமாக இந்தப் படுகொலை வழக்கு விளங்கியது. சர்வதேச அமைப்புகள் இந்தப் படுகொலையைப் பகிரங்கமாகக் கண்டித்திருந்தன.

இந்தநிலையில், திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பிரதான நீதிவான் எம். எச். மொஹமட் ஹம்சா முன்னிலையில் இன்று இந்த வழக்கு கட்டளைக்காக வந்தது.

“வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் மன்று திருப்தியடையும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. அதனால் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 153 மற்றும் 154ஆம் பிரிவுகளின் கீழ் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சான்றாதாரங்களுடன் முன்வைக்கப்படவில்லை. அதனால் 13 எதிரிகளும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர்” என்று பிரதான நீதிவான் எம்.எச். மொஹமட் ஹம்சா கட்டளை வழங்கினார்.

இதேவேளை, 13 அரச படையினருக்கும் எதிராக சட்டமா அதிபர் தனக்குள்ள அதிகாரத்தின்படி மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட ஏற்பாடுகள் உண்டு. எனினும், அது நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான்.

படுகொலையுடன் சம்பந்தப்பட்ட அரச படையினர் 13 பேரும் விடுவிக்கப்பட்டமை நீதியை எதிர்பார்த்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது தொடர்ப்பில் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *