கிளிநொச்சியில் மீண்டும் சோகம்! ரயிலுடன் மோதுண்டு மாணவன் உயிரிழப்பு!!
கிளிநொச்சியில் ரயிலுடன் மோதுண்டு பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தபால் ரயிலுடனேயே குறித்த மாணவன் மோதுண்டுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் லதுஷான் (வயது – 14) என்ற மாணவனே இதன்போது பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி, பரந்தன் பகுதிக்கும் கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கும் இடையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து பலியான மாணவனை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தை குறித்த ரயில் வந்தடைந்தது.
இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
உயிரிழந்த மாணவனின் சடலத்தை கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்குப் பொலிஸார் எடுத்து வந்தனர்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறுகின்றன.