பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சஹ்ரானின் மனைவி சாட்சியம்!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் தலைவர் சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கொழும்பிலிருந்து கல்முனை நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருதில் தானும், சஹ்ரானின் சகோதரர்கள் உள்ளிட்ட உறவினர்களும் தங்கியிருந்தபோது அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு முன்னர் சிலருக்குப் பணம் விநியோகித்ததாகவும், பணம் பெற்றவர்களைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் எனவும் சஹ்ரானின் மனைவி கூறியதையடுத்து அது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது மேற்படி விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கினார்.
இதையடுத்து கல்முனை நீதிவான் நீதிமன்றம் குறித்த வாக்குமூலம் தொடர்பான விசாரணையைத் திகதி குறிக்காமல் ஒத்திவைத்தது.
அதன்பின்னர் சஹ்ரானின் மனைவியும் மகளும் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கும் சஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.