ரிஷாத்தின் சாட்சியமளிப்பு வெள்ளி வரை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக இன்று மாலை முன்னிலையானாலும், தெரிவுக்குழுவின் கோரிக்கைக்கமைய அவரின் சாட்சியமளிப்பு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவில் இன்று முதலாவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவின் சாட்சியங்கள் பெறப்பட்டிருந்தன.

அதன்பின்னர், வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.டீ.என்.ஆர். அசோக்க, தொழிற்றுறை அபிவிருத்தி சபையின் நிறைவேற்று அதிகாரி டீ.எல்.யூ. ரன்னமல்ல ஆகி​யோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

எனினும், மாலை 5 மணியளவில் சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழுவில் முன்னிலையான போதிலும் சாட்சியமளிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

“அவசர கூட்டம் ஒன்று இருப்பதன் காரணமாக சாட்சியத்தை இன்று பதிவு செய்ய முடியாது. எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தங்கள் சாட்சியத்தைப் பதிவுசெய்யத் தீர்மானித்துள்ளோம்” என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் அறிவித்ததையடுத்து கதிரையில் உட்கார்ந்த கையோடு அங்கிருந்து வெளியேறினார் ரிஷாத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *