குருணாகல் வைத்தியர் ஷாபி அடிப்படை உரிமை மீறல் மனு!
கைதுசெய்யப்பட்டுத் தான் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது எனக் கூறி, குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சேகு சிஹாப்தீன் ஷாபி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டேகொட மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மோசடியான முறையில் சொத்து சம்பாதித்துள்ளது எனக் குற்றம் சுமத்தி, தன்னைக் கைதுசெய்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு சிஹாப்தீன் ஷாபி தனது மனுவில் கோரியுள்ளார்.
ஆபதீன் அசோசியேட்ஸ் சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவுடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஹாபீஸ் ஃபாரிஸ், ஷிபான் மஹ்ருப், என். ஜெகதீஸ்வரன் ஆகிய சட்டத்தரணிகள் ஊடாக இந்த மனு நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.