தமிழர்களின் பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம்! – அமைச்சரவையில் கிளர்ந்தெழுந்தார் மனோ

* எங்கே கல்முனை வடக்கு பிரதேச செயலக வாக்குறுதி?
* எங்கே நீங்கள் தருவதாகச் சொன்ன புதிய அரசமைப்பு?
* எங்கே அரசியல் தீர்வு?
* எங்கே அரசியல் கைதிகள் விடுதலை?

“கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இந்த அரசைத் தொடர்ந்து நல்லெண்ண நோக்கில் பாதுகாத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்த அரசு ஏமாற்றி அந்தரத்தில் போட்டுள்ளது. தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளையும் இந்த அரசு பின்வரிசையில் போட்டு விட்டது. இதையிட்டு நான் வெட்கமடைகின்றேன். அதேவேளை, இனியும் தமிழர்களாகிய எங்களது பொறுமையைச் சோதிக்க வேண்டாம் எனவும் கூறிவைக்க விரும்புகின்றேன்.”

– இவ்வாறு இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஆவேசத்துடன் தெரிவித்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சருமான மனோ கணேசன்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டுவந்து உரையாற்றும்போதே அமைச்சர் மனோ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று இந்நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சரவை அமைச்சர்களாக நானும், அமைச்சர் திகாம்பரமும்தான் இருக்கின்றோம்.

எனவே, இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் தொடர்பில் எனக்குக் கடப்பாடு இருக்கின்றது. இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு, தெற்கு திசைகளில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் தமது பிரச்சினைகள் தொடர்பில் நான் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.

ஆகவே, நான் இவை பற்றி இந்த நாட்டின் அதியுயர் சபையான இந்த அமைச்சவையில் பேசுகிறேன். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள நான் வரமுன் இன்று காலை நானும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் கலந்துரையாடினோம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஒரு முழுநேரக் கணக்காளர் ஒருவரை நியமிப்பதாக அரசின் துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தன எழுத்துமூலமாகக் கூட்டமைப்புக்கு உறுதி வழங்கியுள்ளார் என அவர் எனக்குக் கூறினார். அந்தக் கடிதத்தை நானும் நேரடியாக வாசித்தேன்.

இந்த நியமனம் நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், ஆனால் அது இன்னமும் வழங்கப்படவில்லை எனவும் சுமந்திரன் எம்.பி. குற்றம் சாட்டுகின்றார்.

இதற்கு, துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் என்ன பதில் கூறுகின்றீர்கள் என நான் இங்கே தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்.

இன்று எங்கள் பிரச்சினைகளை நீங்கள் பின்வரிசையில் போட்டுள்ளீர்கள். இனியும் தமிழர்களாகிய எங்களது பொறுமையைச் சோதிக்க வேண்டாம்.

இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி சபை எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் எனக்கும் இருக்கின்றன.

இருந்தாலும் இன்று நாடு முழுக்க இப்படியான இன, மத அடிப்படையில் பிரதேச செயலகங்கள் உள்ளன. வவுனியா தெற்கில் நிலத்தொடர்பற்ற சிங்கள பிரதேச செயலகம் உள்ளது. முஸ்லிம் மக்களை மையமாக வைத்தும் பிரதேச செயலகங்கள் உள்ளன.

இந்தநிலையில் தமிழ் மக்கள் தமது பிரதேச செயலகங்களை தரமுயர்த்த முயலும்போது மட்டும் ஏன் தடை போடுகின்றீர்கள்? ஏன் இதை மாத்திரம் அரசு இழுத்தடிக்கின்றது?

ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப பிரதேச செயலகத்தையே, முழுப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தும்படி தமிழர்களின் இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

உண்மையில் முஸ்லிம் மக்களுக்கு இந்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக எல்லைகள் தொடர்பில் பிரச்சினை இருக்கின்றது.

அது எனக்குத் தெரியும். ஆகவே, அதையும் தொடர்ந்து இழுத்தடிக்காமல் பேசித் தீர்க்க வேண்டும்.

அதற்கு முன் அரசு உறுதியளித்ததுபோல் முதலில் முழுநேரக் கணக்காளர் ஒருவரை இந்தக் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நியமிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கின் ஏனைய பிரதேசங்களிலும் இந்தப் பிரச்சினை காரணமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் இனத்தவர் மத்தியில் இந்தப் பிரச்சினை மூலம் இன உறவு சீர்கெடுகின்றது. அதை இனியும் அனுமதிக்க முடியாது.

வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு, தெற்கு திசைகளில் வாழும் தமிழர்கள் மிக அதிகமான சிறுபான்மை இன வாக்குகளை வழங்கி இந்த நல்லாட்சியையும், ஜனாதிபதியையும் கொண்டு வந்தோம்.

அதேபோல் அரசுக்குள் இருந்து தமிழ் முற்போக்குக் கூட்டணி உங்களைப் பாதுகாக்கிறது. வெளியே இருந்தபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உங்களைப் பாதுகாக்கின்றது.

இந்த உண்மைகளை ஜனாதிபதியும், பிரதமரும் மறந்துவிடக் கூடாது.

உண்மையில் தமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசு பின்வரிசையில் போட்டு விட்டது. எங்கே நீங்கள் தருவதாகச் சொன்ன புதிய அரசமைப்பு? எங்கே அரசியல் தீர்வு?

எங்கே அரசியல் கைதிகள் விடுதலை? சில தினங்களுக்கு முன் ஒரு தமிழ் கைதி 15 வருடங்கள் சிறையில் இருந்து இறந்துபோயுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இன்று விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்ட யுகம் முடிந்து, சஹ்ரானின் ஆயுதப் போராட்ட யுகம் ஆரம்பித்துள்ளது.

எனினும், இன்னமும் விடுதலைப்புலிகளின் காலத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் பத்து, பதினைந்து, இருபது வருடங்கள் என நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

எதிர்வரும் வாரத்தில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நான் கொண்டுவரவுள்ளேன்.

இங்கே உள்ள அமைச்சர்கள் அது தொடர்பில் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். தமிழ் மக்கள் உங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள்” – என்றார்.

அமைச்சர் வஜிர

இதன்போது அமைச்சர் மனோ கணேசனுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் வஜிர அபேவர்தன,

“அடுத்த ஒரு வாரத்துக்குள் பிரதமர் தலைமையில் நடைபெறும் கலந்துரையாடலில், நானும் அமைச்சர்களான மனோ கணேசன், தயா கமகே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகக் கணக்காளர் நியமனம் தொடர்பிலும், உப செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பிலும் தீர்மானம் எடுப்போம்” என்றார்.

அமைச்சர் சம்பிக்க

இதன்போது கருத்துக் கூறிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, “அமைச்சர் மனோ கணேசனுடன் நான் முழுமையாக உடன்படுகின்றேன். இந்த விடயத்தை இனியும் இழுத்தடிக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜித

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, “அமைச்சர் மனோ கணேசன் கூறிய தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *