கிளிநொச்சியில் கோர விபத்து! 5 இராணுவத்தினர் உயிரிழப்பு!!
கிளிநொச்சியில் ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி, 55ஆம் கட்டை, காளி கோயிலடிப் பகுதியில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மதிய நேர யாழ்தேவி கடுகதி ரயிலுடன் ஏ – 9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கிப் பயணித்த இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் அருகில் வருவதை அவதானிக்காத இராணுவ வாகனத்தின் சாரதி, ரயில் பாதையைக் கடக்க முற்பட்டபோதே ரயிலுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த ரயில் கடவையானது பாதுகாப்பற்ற ரயில் கடவையாகும். இதற்கு முன்னரும் இரண்டு விபத்துக்களில் மூவர் பலியாகியிருந்தனர். இது மூன்றாவது விபத்தாகும்.
விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 இராணுவத்தினர் பலியாகினர். படுகாயமடைந்த 3 இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.