சுயபுத்தியில் செயற்படுங்கள்; எதிரணியினரை நம்பாதீர்கள்! – மைத்திரிக்கு ரவி அறிவுரை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணியினரை நம்பாமல் தனது சுயபுத்தியில் செயற்பட வேண்டும். அப்போதுதான் அவரும் அரசும் ஒத்துழைத்துச் செயற்பட முடியும்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க.

அவர் மேலும் கூறுகையில்,

“2015ஆம் ஆண்டு நல்லாட்சியின் ஆரம்பத்தில் தேசிய அரசு அமைக்கப்பட்டது. அந்தத் தேசிய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை ஓரணியில் பயணித்தது.

ஆனால், ஆட்சியைக் கவிழ்க்க மஹிந்த அணியினர் வகுத்த சதிக்குள் ஜனாதிபதி மைத்திரி சிக்கியதால் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’யை அவர் அரங்கேற்றினார். ஆனால், அவரினதும், மஹிந்த அணியினரினதும் கூட்டுச் சூழ்ச்சி வெற்றியளிக்கவில்லை.

52 நாட்களில் அந்தச் சூழ்ச்சியை ஐக்கிய தேசியக் கட்சி முறியடித்தது. அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெரிதும் ஒத்துழைத்தன.

அரசியல் சூழ்ச்சியை ஜனாதிபதி அரங்கேற்றினாலும் அவரின் பதவிக் காலத்தில் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி அவருடன் இணைந்து பயணிக்கவே நாம் விரும்புகின்றோம். ஆனால், அவர் இன்னமும் பொது எதிரணியினரின் கருத்துக்களைத்தான் கேட்டுக்கொண்டு இருக்கின்றார். அவர் சுயபுத்தியுடன் செயற்படுவதே நாட்டுக்கும் அவருக்கும் நல்லது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *