ராஜபக்ச குடும்பத்துக்குள் வலுக்கின்றது மோதல்! – கோட்டாவே வேட்பாளர் என்கிறார் பஸில்
“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணி சார்பில் கோட்டாபாய ராஜபக்சவே போட்டியிடுவார். அவரது பெயரே முதலிடத்தில் உள்ளது.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். அதனை மறுத்திருந்த மஹிந்த ராஜபக்ச, தமது வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூறியிருந்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே பஸில் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனித்தே போட்டியிடும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இனியும் நம்புவதற்கு நாம் தயாரில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவின் பெயரே முதலிடத்தில் உள்ளது. எனினும், ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உயர்பீடமே வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.