கடும் இனவாதத்தைக் கக்கும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்! – முஸ்லிம்களின் கடைகளுக்கு சிங்களவர்கள் செல்லக்கூடாது எனவும் வலியுறுத்து
யட்டிநுவர, தியகெலினாவ, கித்சிறிமேவன் ரஜமஹா விகாரையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் கடும் இனவாதத்தைக் கக்கும் வகையில் பேசியுள்ளார்.
“முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை சிங்களவர்கள் பகிஷ்கரிக்க வேண்டும். அத்துடன், முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் உணவுகளையும் உண்ணக்கூடாது” எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிக்க எடுத்த செயற்பாடுகள் இப்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளன. எனது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வைத்தியர் ஒருவர் இலட்சக்கணக்கான எமது குழந்தைகளை இல்லாமலாக்கியுள்ளார். இப்படியான சிங்கள இனத்தை அழிக்க நினைக்கும் தேசத்துரோகிகளை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் எனப் பலர் என்னிடம் கூறினர்.
அப்படி செய்யுங்கள் என நான் கூறமாட்டேன். ஆனால், செய்யப்படவேண்டியது அதுதான். நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்களை மட்டும் மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.