மைத்திரியிடம் கருத்து கேட்க தயாராகின்றது தெரிவுக்குழு! – ஜனாதிபதி இருக்கும் இடத்துக்குச் சென்று அவரின் கருத்துக்களைப் பெற யோசனை
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் கேட்டறியத் தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.
முன்னதாகத் தெரிவுக்குழுவில் சாட்சியங்களை வழங்கிய சிலர் ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியதாலும் – தெரிவுக்குழுவின் உறுப்பினர்களைச் சந்திக்க ஜனாதிபதியும் விருப்பு வெளியிட்டுள்ள சூழ்நிலையிலும் ஜனாதிபதியின் கருத்துக்களை கேட்டறியத் தெரிவுக் குழு உத்தேசித்துள்ளது.
தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு ஜனாதிபதியைக் கேட்பது இப்போதுள்ள அரசியல் நிலையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்பதாலும் – தெரிவுக்குழுவில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதாலும் ஜனாதிபதி இருக்கும் இடத்துக்குச் சென்று அவரின் கருத்துக்களைப் பெற யோசனை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தெரிவுக்குழு உறுப்பினர்களைச் சந்திக்கவேண்டுமென ஜனாதிபதி கூறியிருப்பதால் அவர் குறிப்பிடும் இடத்துக்குச் சென்று அவரிடம் கருத்துக்களைப் பெற யோசிக்கப்பட்டுள்ள அதேவேளை, இது ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் அடுத்தடுத்த வாரங்களில் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்படுவர்.