கோட்டா களமிறங்கினால் ஐ.தே.கவின் வெற்றி உறுதி! – பந்துலவின் கருத்துக்கு மங்கள பதிலடி
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் ஐக்கிய தேசியக் கட்சிதான் வெற்றிபெறும். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இப்போதைக்கு அறிவிக்கமாட்டோம்.”
– இவ்வாறு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச என்பது உறுதியான விடயம் எனத் தெரிவித்திருந்த பொது எதிரணியின் நாடளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவரைக் களமிறக்கினாலும் படுதோல்வியடையும் எனவும் கூறியிருந்தார்.
இது தொடர்பில் கேட்டபோதே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.
“ராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு நாட்டு மக்கள் இடமளிக்க மாட்டார்கள். நாட்டின் நலனையும் மூவின மக்களினது ஒற்றுமையையும் விரும்புகின்ற ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் நாட்டு மக்கள் வாக்களிக்கத் தயாராக இருக்கின்றார்கள்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.