பயங்கரவாதிகளுக்கு ரிஷாத் உதவவில்லை! – மு.கா. திட்டவட்டம்
சஹ்ரான் ஹாசீமுனுடன் ரிஷாத் பதியுதீன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், அவர் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார் என்றும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“ஏப்ரல் 21 குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்த நாட்டு முஸ்லிம்கள் இனவாத நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அதன் ஓரங்கமாகவே முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகும் சம்பவம் நிகழ்ந்தது.
ரிஷாத் பதியுதீன் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார் என்றும் குற்றம் சுமதி அத்துரலிய தேரர் அவருக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததோடு உண்ணாவிரதப் போராட்டத்திலும் இறங்கினார்.
ரிஷாத் மீது சுமத்தப்பட்டிருப்பது அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டாகும். மனச்சாட்சியுடன் கூறுகின்றேன். அவர் சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார் என்றும் கூறப்படுவது இனவாத ரீதியான தாக்குதலாகும்.
அவர் உண்மையில் சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்வதற்கு நான் அனுமதி வழங்கி இருக்கமாட்டேன்” – என்றார்.