பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கை சென்றபோது பார்த்தேன்! – இந்தியப் பிரதமர் மோடி தெரிவிப்பு

“பல அப்பாவி மக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கைப் பயணத்தின்போது கொழும்பில் பார்த்தேன்.”

– இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு நரேந்திர மோடி விஜயம் செய்ததுடன், ஈஸ்டர் தினத்தன்று குண்டுத் தாக்குதலுக்குள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தையும் பார்வையிட்டிருந்தார்.

இந்தநிலையில், கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரு நாள் மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தீமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியது அவசியமாகும். பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு நான் சென்றிருந்தபோது கொழும்பு நகரில் உள்ள அந்தோனியார் தேவாலயத்தில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதத்தின் கோர முகத்தை என்னால் காணமுடிந்தது.

எனவே, இவ்வாறு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், துணைபுரியும் மற்றும் நிதியளித்து ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அக்கறை காட்ட வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *