ரிஷாத், ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி மூவரையும் சிறையில் அடையுங்கள்! – அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அத்துரலிய தேரர்
“அமைச்சுப் பதவி மற்றும் ஆளுநர் பதவிகளைத் துறந்துவிட்டார்கள் என்பதற்காக ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா மற்றும் அஸாத் ஸாலி ஆகியோரை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் மூவரையும் அரசு உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்.”
– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இவர்கள் மூவரையும் பதவி நீக்கக் கோரி நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன். நான்காவது நாளில் இவர்கள் மூவரும் தாமாகவே பதவிகளைத் துறந்துள்ளனர். அதேவேளை, இவர்களுடன் இணைந்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளைத் துறந்துள்ளனர்.
இவர்கள் மூவரையும் காப்பாற்றுவதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கமாக இருக்கின்றது. அதற்காகவே அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளைத் துறந்துள்ளனர்.
ஆனால், ரிஷாத், ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி ஆகிய மூவரையும் நாம் தப்பிக்க விடமாட்டோம். ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைக் குண்டுதாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த இவர்கள் மூவரையும் அரசு உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்” – என்றார்.