தெரிவுக்குழுவை கலைக்க முடியாது! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்து மூன்று மாதங்களுக்குத் தடையின்றி இயங்கும் எனத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டமையுடன் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது மூன்று மாத காலம் குறிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட நிலையில் அந்தக் காலப்பகுதி வரை தொடர்ந்தும் இயங்கும்.
நாடாளுமன்றம் இந்தத் தெரிவுக்குழுவைக் கலைத்தாலே தவிர வேறு யாராலும் இதனைக் கலைக்க முடியாது.
மேலும், பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அரசமைப்பில் இடமிருக்கின்றது” – என்றார்.