அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி பெறவில்லை! – தெரிவுக்குழு முன்னிலையில் ஒப்புக்கொண்டார் ரத்னசிறி

அரச ஊழியர்கள் ஆடை தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெறவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி.

உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல்களின் பின்னர் வேலைத்தளங்களில் ஆடை அணிதல் தொடர்பான சர்ச்சை எழுந்தது. இதையடுத்து வேலைத்தளங்களில் அரச ஊழியர்கள் அணிய வேண்டிய ஆடைகள் குறித்து அண்மையில் சுற்றறிக்கையொன்றை இவர் வெளியிட்டிருந்தார்.

அமைச்சரவையின் அனுமதியைப் பெறாமல் இவர் இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார் என்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க வருமாறு இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இவர் இன்று தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்

இதன்போது இவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைச்சரவையில் அனுமதி பெறப்படவில்லை . அது அனைத்துச் செயலாளர்கள் மட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது. பல தரப்பின் கரிசனைகள் உள்வாங்கப்பட்டே அந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அந்தச் சுற்றறிக்கையால் எதுவும் சர்ச்சைகள் ஏற்பட்டதாக எவரும் என்னிடம் எழுத்து மூலம் முறையிடவில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *