கண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் இவ்வுலகத்தில் இருந்து விடைபெற்ற விதுஷன்!

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சி.விதுஷன் (வயது 11) நேற்று (10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கண்ணீர் சிந்தியவாறு வரைந்த தனது ஓவியத்தோடு தனது வரைதலுக்கு விடைகொடுத்து அனைவரையும் கண்ணீரால் உறைய வைத்துள்ளார் குறித்த சிறுவன்.

பல்வேறு திறமைகளைத் தன்னகத்தே கொண்டு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் தரம் 6இல் கல்வி கற்று வந்த சிவனேசன் விதுசன் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலதிக சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பலரும் முன்வந்து தமது நிதியுதவியை அளித்து அவரை இந்தியாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பியிருந்தனர்.

சில நாட்களாக இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த விதுசன் நேற்று சிகிச்சை பலனின்றி இந்தியாவில் காலமானார்.

சிகிச்சைக்காக 75 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக முகநூல்களிலும் ஊடகங்களின் வாயிலாகவும் பெற்றோரால் விடப்பட்ட கோரிக்கைக்கமைய வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் சுமார் 16 இலட்சம் ரூபா உட்பட பல உபகாரிகள் பணத்தை வழங்கி சிறுவனின் உயிரைக்காக்க உதவியிருந்தனர்.

இவ்வாறு விதுசனின் உயிரைக்காக்க வேண்டுமென தம்மாலான உதவிகளை வழங்கியிருந்தவர்களுக்கு பெற்றோர் நன்றியையும் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், விதுசன் மீள் சுகதேகியாக வருவான் என எதிர்பார்த்த பலரும் இன்று அவனது இழப்பைத் தாங்கமுடியாது கவலையடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *