ஒன்பது வருட சிறைவாசத்தின் பின் சக்வித்தி ரணசிங்கவுக்குப் பிணை!
ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த சக்வித்தி ரணசிங்கவுக்கு இன்று (10) பிணை வழங்கப்பட்டுள்ளது.
162 கோடி ரூபாவுக்கும் அதிக நிதியை மோசடி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளின் பிரதான சந்தேகநபர் இவராவார்.
2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வத்தளைப் பகுதியில் கைதுசெய்யப்பட்ட சத்வித்தி ரணசிங்க இதுவரைகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவர் மீதான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரைக் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. இதன்படி ஆறு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெறுமதியான 6 சரீரப் பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சக்வித்தி ஹவுஸ் மற்றும் சக்வித்தி கன்ஸ்ட்ரக்சன் ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வைப்பிட்ட 162 கோடிக்கும் அதிகமான தொகையை அவர் மோசடி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.