ஏப்ரல் 21 ‘குண்டுத் தாக்குதல்கள்:’ விசாரணைக்குழு அறிக்கை மைத்திரியிடம் கையளிப்பு!

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசரான விஜித் மலல்கொடவினால் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஆகியோர் இதன்போது வருகை தந்திருந்தனர்.

பல அப்பாவி உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த இந்த மோசமான தேசிய துன்பியல் சம்பவத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் மற்றும் அதன் பின்புலம் குறித்தும், குறித்த சம்பவங்கள் தொடர்பான வேறு காரணிகள் குறித்தும் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஜனாதிபதியால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.

இரண்டு கட்டங்களாக அமைந்த இந்த விசாரணை நடவடிக்கைகளின் இரண்டு இடைக்கால அறிக்கைகள் இதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *