மீண்டும் களமிறங்க வேண்டும்! – மைத்திரியிடம் சு.க. எம்.பிக்கள் நேரில் கடிதம் மூலம் கோரிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதமொன்றை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான குழுவினருடன் முற்போக்குக் கூட்டணியொன்றை அமைக்க வேண்டும் எனவும், அக்கூட்டணிக்கு தலைமை வகிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தின் ஊடாக ஜனாதிபதி மைத்திரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை நண்பகல் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, பைசர் முஸ்தபா, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, லசந்த அழகியவண்ண, வீரகுமார திஸாநாயக்க, துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீயானி விஜேவிக்ரம, மொஹான் லால் கிரேரு, சாந்த பண்டார ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.