ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தயார்! – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

கட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எனது சிறுவயதில் நான் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவைச் சென்று பார்ப்பதுண்டு. அவர் பதவி ஆசைகளுக்கு அடிபணியாமல் நாட்டுக்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றுவதற்கு எனக்குப் பயிற்சியளித்தார்.

நான் சுத்தமான கரங்களுடனேயே எனது அரசியலை ஆரம்பித்தேன். அதேபோன்று கறைபடியாத கரங்களுடனேயே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்.

இதுவரை நான் வகித்த பதவிகள் எவற்றுக்காகவும் நான் யாருடைய ஆதரவையும் கோரியதில்லை. அந்தப் பதவிகள் தானாக என்னை வந்தடைந்தன.

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால், தேசத்தைக் கட்டியெழுப்பும் எந்தப் பதவிக்காகவும் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்குத் தயார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது பலர் எனது பெயரைக் குறிப்பிடுகின்றனர். வேறு யாராவது கட்சியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பினால் நான் அவர்களுக்குக் குறுக்கே நிற்க விரும்பவில்லை.

கட்சி ஐக்கியத்துடன் ஏகோபித்த முடிவை எடுத்தால் நான் அதனை ஏற்றுக்கொள்வேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *