இலங்கைக்கு அவமானத் தோல்வி! பத்து விக்கெட்டுக்களினால் நியூசிலாந்து அபார வெற்றி!!
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி வெற்றியை ருசித்தது.
இதன் பிரகாரம் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரை இலங்கை அணியை வீழ்த்திய பெரிய வெற்றியுடன் தொடங்கியுள்ளது நியூசிலாந்து அணி.
இன்று சனிக்கிழமை, கார்டிஃப்பில் நடந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இலங்கை அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இரண்டாவதாகக் களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களிலேயே, ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 137 என்ற இலக்கை அடைந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்டில் 51 பந்துகளில் 73 ஓட்டங்கள் மற்றும் காலின் மன்றோ 47 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்தனர்.
அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 84 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்ததே இலங்கை அணிக்கு அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
இலங்கை அணியின் குசால் மெண்டிஸ், மத்யூஸ் மற்றும் இசுரு உதான ஆகியோர் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து வீரர்கள் மேட் ஹென்றி மற்றும் பெர்குசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மூன்று முறை உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடி ஒரு முறை கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை அணி, இந்த உலகக் கிண்ணத்துக்கான பயிற்சி ஆட்டங்கள் இரண்டிலும் தென்னாரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளிடமும் தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள நியூசிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அடுத்தபடியாக புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட இரண்டு அணிகளுமே ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் ஓட்ட விகித அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் முதலிடம் பிடித்தது.
இதேவேளை, அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேரர்கள், சிங்கள மக்கள், சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள – பௌத்த அமைப்பினர் நேரில் சென்று ஆதரவு வழங்கி வருகின்றனர்.