யார் இந்த நேசமணி?

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டு விட்டதாகவும் அவருக்காகப் பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் ஆரம்பமான பிரசாரம், உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், மே 27ஆம் திகதியன்று, சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது.

அந்தத் திரைப்படத்தின் கீழ், டுபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், “இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால், டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை செய்யும்போது, பெயிண்ட்டிங் கொன்ட்ரக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன், இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தடுத்த கொமெண்ட்டுகளில், நேசமணிக்காகப் பிரார்த்தனை செய்யவும் என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ் டக்கையும் பயன்படுத்தியிருந்தார்.

சித்திக் இயக்கத்தில், விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த “ஃப்ரண்ட்ஸ்” திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கொன்ட்ரக்டராக வரும் வடிவேலுவின் தலையில், ரமேஷ் கண்ணா சுத்தியலைப் போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தத் திரைப்படத்தில், வடிவேலுவின் பெயர் நேசமணி. ரமேஷ் கண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி.

சிறிது சிறிதாகப் பிரபலமான இந்த ஹாஷ்டாக், முதலில் சென்னையிலும் பிறகு உலக அளவிலும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்டாக ஆரம்பித்துள்ளது.

வடிவேலுவை வைத்து உருவாக்கி மீம்களும் வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *