அரசியல் கைதிகள் விடயம்: விரைவில் தீர்க்கமான முடிவு! – ரணில் கூறுகின்றார்
“அரசியல் கைதிகள் விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பில் பல உயர்மட்டப் பேச்சுக்களை நாம் நடத்தியுள்ளோம். தொடர்ந்தும் இந்தப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்.”
– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரருக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமாயின் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்யமுடியாது? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்கு எமது ஆட்சியில் படிப்படியாகத் தீர்வுகளை வழங்கி வருகின்றோம். அதுபோல் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கும் நாம் தீர்வு வழங்கியே தீருவோம்” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் அரசியல் கைதிகளை இப்போதைய சூழலில் விடுவிப்பது கடினம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.