‘அபாயா’வால் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடு! – கிழக்கு முன்னாள் முதல்வர் நஸீர் சுட்டிக்காட்டு

“அபாயகரமான ஆடையாக ‘அபாயா’ உருவகப்படுத்தப்படும் நடைமுறை தற்போது தோற்றம் பெற்றுள்ளது. ஆன்மீகக் கோட்பாடுகளுக்கு அமைவாக, ஒரு சமுகத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கப் பயன்படுத்தப்பட்ட இந்த ஆடை அணிதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் நடைமுறைகள் நல்லிணக்கத்துக்கும் இனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்தலுக்கும் எதிர்காலத்தில் பாதகங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“உயிர்த்த ஞாயிறு சம்பவத்துக்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்புக் கருதி முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிக்கூடாது என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. பின்னர் அதில் திருத்தமும் செய்யப்பட்டது.

எனினும், இத்தயை ஆடை ஆணிதல் என்பது முஸ்லிம் சமுகத்தினருக்கு மட்டும் உரித்துடையதாக இருக்கும் நிலையில் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இதனால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவுக்குப் பின்னர் முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை (புர்கா, நிகாப்) அணியாமல் சாதாரணமா அபாயா அணிந்து தமது கடமைகளுக்குச் சென்ற ஆசிரியைகள், மாணவிகள், வைத்தியசாலைக்குச் சென்ற பெண் நோயாளிகள், பஸ்களில் பயணம் மேற்கொண்ட பெண்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தனர். இந்த விவகாரம் தொடர்ந்தும் பல்வேறு வடிவங்களில் ஓர் அடக்குமுறையாக மாறி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

கடந்த நாட்களில் இந்தச் சட்டம் குறித்த புரிதல் இல்லாமை காரணமாகப் பாடசாலைகளில் பல்வேறு குழப்பநிலைகள் எற்படுகின்றன எனத் தெரிவித்து கடந்த வியாழனன்று கல்வி அமைச்சர் அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளார்.

முழுமையாக முகத்தை மூடுவது தொடர்பாக அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படும் கட்டளைக்கு அமைவாகவும், முகத்தை மூடுதல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ள சுற்றுநிருபத்துக்கு அமைவாகவும் அமைச்சரின் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் நோக்கும்போது தொடர்ந்தும் இவ்விடயத்தில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்படலாம் என்ற நிலைமையே தெளிவாகின்றது.

அவசரகால நிலைமையைக் கருத்தில்கொண்டு முஸ்லிம் மக்கள் இந்த சட்ட அமுலாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் நிலையில் சிலர் இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு தத்தமது சொந்த விருப்பங்களுக்கு அமைய இந்த ஆடை அணிதல் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சிலர் அபாயாவை கறுப்பு நிறத்தில் உடுத்தாது வேறு வர்ணங்களில் உடுத்த வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர் இது அரேபிய கலாசார ஆடை; இதை முற்றாகத் தடைசெய்ய வேண்டும் என்கின்றனர். மொத்தத்தில் இந்த ஆடை அணிதல் தொடர்பில் திடீரென எழுந்துள்ள நெருக்குவாரமானது பல்வேறு ஐயப்பாடுகளைத் தோற்றுவிக்கும் நிலைகளை எடுத்துக்காட்டுகின்றன.

தனிமனித சுதந்திரம் மறுக்கப்படுகின்றமைக்கு அப்பால் கலாசாரப் பாரம்பரியங்களை வேரறுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்றே கருதவேண்டியுள்ளது. எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம் மத மற்றும் அரசியல் தலைமைகள் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *