தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் தலவாக்கலை இளைஞர்! – பொலிஸார் தீவிர விசாரணை
தலவாக்கலையில் தலையில் பலத்த காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் பகுதியில் ரயில் பாதையில் இன்று காலை 10 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியால் சென்ற பொதுமக்கள் சடலமொன்று கிடப்பதைக் கண்டு தலவாக்கலைப் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை ஒலிரூட் கீழ்ப் பிரிவைச் சேர்ந்த பெனடிக் ரொஷான் (வயது 23) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் தோட்ட தேயிலைத் தொழிற்சாலையில் நேற்று இரவு நேரத் தொழிலுக்குச் சென்றிருந்தார். எனினும், இன்று காலை வரை வீடு திரும்பியிருக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
இவர் ரயிலில் சிக்குண்டு உயிரிழந்துள்ளாரா அல்லது எவராவது கொலை செய்து ரயில் பாதையில் எரிந்து சென்றார்களா அல்லது இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளாரா எனப் பல கோணங்களில் தலவாக்கலைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது எனத் தலவாக்கலைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.