ஜனாதிபதி, பிரதமர் சொன்னால் பதவியைத் துறப்பதற்குத் தயார்! – அமைச்சரவையில் ரிஷாத் அதிரடி
“ஜனாதிபதி அல்லது பிரதமர் சொன்னால் நான் உடன் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகின்றேன். வேறு யார் கூறுவதையும் ஏற்று செயற்பட நான் தயாராக இல்லை.”
– இவ்வாறு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் விசனத்துடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் என ‘தமிழன்’ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
“எனது அரசியல் வாழ்க்கையை இல்லாமலாக்க எதிர்க்கட்சி முயல்கின்றது. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் இராணுவத் தளபதிக்கு அழுத்தத்தை வழங்கவில்லை. கைதான ஒருவரின் விபரத்தையே அவரிடம் கேட்டேன். ஜனாதிபதி அல்லது பிரதமர் கூறினால் இப்போதே அமைச்சுப் பதவியிலிருந்து விலக நான் தயார்” என்று அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் குறிப்பிட்டார் என அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.