ஞானசாரர் விடுதலை! – பொதுமன்னிப்பளித்தார் மைத்திரி

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

அதற்கமைவாக ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி இன்று மாலை கையெழுத்திட்டார்.

இதையடுத்து அந்த ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஞானசார தேரர் நாளை வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து வெளியேறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வெசாக் தினத்தன்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஞானசார தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவரைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரரைப் பொதுமன்னிப்பளித்து விடுவிக்க வேண்டும் என ஏற்கனவே ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கப்பட்டு வந்தது. பிரதான பெளத்த மத பீடங்கள் உட்படப் பல்வேறு தரப்புக்களும் ஞானசார தேரரை விடுவிக்குமாறு தொடர்ச்சியாகக் கோரி வந்தன.

இதனையடுத்து வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதியினால் கைதிகளுக்கு வழங்கப்படும் பொதுமன்னிப்பின்போது ஞானசார தேரரும் விடுவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆயினும், வெசாக் முடிவடைந்து நான்கு தினங்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *