சிறு திருத்தங்களுடன் பழைய முறையில்தான் மாகாணசபைத் தேர்தல்!
மாகாண சபைத் தேர்தலை சிறு திருத்தங்களுடன் பழைய முறைப்படி நடத்த நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை எந்த அடிப்படையில் நடத்துவது என்பது பற்றி இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது பழைய முறைமையில் தேர்தலை நடத்தலாம் எனப் பலரும் கூறினர்.
எப்படியாயினும் சிறு திருத்தங்களைச் செய்து எந்த அடிப்படையில் தேர்தலை நடத்துவது என்பது பற்றி விரைவில் தீர்மானிக்கலாம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டார்.
பெரும்பாலும் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும், அதற்கு முன்னர் அதிலுள்ள சில குறைபாடுகளை நிவர்த்திக்கவும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
பழைய தேர்தல் முறைமையில் நடத்த எப்படியான திருத்தங்களைச் செய்வது என்பது குறித்து அமைச்சர்களான மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும் ஜனாதிபதியுடன் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிப்படையாமல் இருக்க சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என மேற்படி இரு அமைச்சர்மாரும் வலியுறுத்துகின்றனர் என்றும் கூறினார்.