தாக்குதலுடன் ரிஷாத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; அவர் ஏன் பதவி விலக வேண்டும்? – அவசியமில்லை என்கிறார் ரணில்
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியை தற்காலிகமாக இராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடியோடு நிராகரித்துவிட்டார் என ‘தமிழன்’ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றுக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், நம்பிக்கையில்லாப் பிரேரணை அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதால் அவர் தற்காலிகமாகப் பதவியில் இருந்து விலகினால் இப்போதைய பிரச்சினைகளைச் சமாளிக்கலாம் எனவும், ரவி கருணாநாயக்க, திலக் மாரப்பன ஆகியோர் முன்னர் அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்ததுபோல் ரிஷாத்தும் தனது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் தீர்மானித்தனர்.
இந்தக் கோரிக்கை பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கையை உடனே நிராகரித்த ரணில், “தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலோ அல்லது வேறு எந்தக் குற்றங்கள் குறித்தோ ரிஷாத் மீது முன்வைக்கப்படாத நிலையில் அவர் பதவி விலகத் தேவையில்லை” என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்தார் என அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.