ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: ஆதரவாக வாக்களிப்பார் மஹிந்த! – கம்மன்பில நம்பிக்கை
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கையெழுத்திடாவிட்டாலும், அவர் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என நம்பிக்கை வெளியிட்டார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த ஏன் கையெழுத்திடவில்லை என அனைவரும் வினவுகின்றனர். இதற்கு நான் பதில் கூறியே ஆகவேண்டும். அதாவது, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகிய இருவருக்கும் எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் மஹிந்த கையெழுத்திடவில்லை. ஆனால், சபையில் ஆதரவாகவே அவர் வாக்களித்தார். அதேபோல்தான் அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை மீதான வாக்களிப்பின்போதும் அவர் நடந்துகொள்வார்.
மஹிந்த எமது தலைவர். அதேபோல் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். எனவே, அவரது பதவிக்குப் பொருத்தமான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மாத்திரம்தான் அவர் கையெழுத்திடுவார்” – என்றார்.