சட்டம், ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவிடம் வழங்குக! – மைத்திரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது 98 எம்.பிக்களின் கையொப்ப ஆவணம்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய இந்த ஆவணம் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கை அடங்கிய ஆவணத்தை ஒப்படைக்க ஜனாதிபதியிடம் நேரம் கோரியபோதும், ஜனாதிபதி நேரம் ஒதுக்கவில்லை எனவும், கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி வந்தபோது அவரிடம் இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது எனவும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் கோரிக்கையை, தொடர்ச்சியாக ஜனாதிபதி நிராகரித்து வருகின்ற நிலையில், கையெழுத்திட்ட ஆவணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *