சோகமயமானது முள்ளிவாய்க்கால்! – ஓரணியில் திரண்டு உறவுகளை நினைவுகூர்ந்தனர் தமிழர்கள்!!
பிரதான நிகழ்வு, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.
அன்று ஈழ உறவுகளின் குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் மண், இன்று அவர்களின் சொந்தங்களின் கதறல்களால் கண்ணீரில் நனைந்து சோகமயமானது.
தமிழின அழிப்பு நாளான – தமிழ்த் தேசிய துக்க நாளான இன்று, இனப்படுகொலைக்கு நீதி கோரியும் , உயிர்நீத்த உறவுகளை சுடர் ஏற்றி – மலர் தூபி அஞ்சலி செலுத்தி நினைவுகூரவும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் காலை 10.30 மணியளவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஓரணியில் திரண்டனர்.
மனிதாபிமானம் புதைக்கப்பட்டு தமிழர்கள் சாவடிக்கப்பட்ட இறுதிப் போரில் தனது தாயாரை இழந்த 11 வயது சிறுமி ஒருவர் பிரதான ஈகைச் சுடரை ஏற்றிவைத்தார். அதன்பின்னர் அங்கு அணிதிரண்டு நின்ற பொதுமக்கள், மத குருமார்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் சுடர்கள் ஏற்றி – மலர் தூபிகள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.