அடுத்த சஹ்ரான்களை உருவாக்குகிறது அரசு! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு
அடுத்த சஹ்ரான்களை உருவாக்கும் பணியைத் தற்போது அரசு முன்னெடுத்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகளின் வெற்றியல்ல. நாட்டின் ஆட்சியாளர்களின் தோல்வியே தாக்குதல் வெற்றியடையக் காரணம்.
நாட்டின் பாதுகாப்பைப் பாதுகாப்பற்றதாக மாற்றி வாக்குப் பலத்தை அதிகரிப்பதற்காக அடிப்படைவாதிகளை ஊக்குவித்தமை தற்போது உறுதியாகியுள்ளது.
அரசின் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது என்பது அண்மைக்காலச் சம்பவங்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இனவாதத்தைத் தூண்டிவிட்டு ஜுலை கலவரத்தை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் அது இரண்டு, மூன்று நாட்கள் மாத்திரமே நீடித்தன.
ஆனால், ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னர் மினுவங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இனவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் இருப்பவர் யார்?
சஹ்ரான்கள் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஆனால், அடுத்த சஹ்ரான்களை உருவாக்கும் பணியை தற்போது அரசு முன்னெடுத்து வருகின்றது” – என்றார்.