முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முற்பகல் 10.30 மணிக்கு! – அனைவரையும் அணிதிரள அழைப்பு

தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் நாளை சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.

இதற்காக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் குருக்கள், கன்னியர்கள், இந்து மத குருக்கள், பொதுமக்கள் இணைந்து சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.

இறுதிப்போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தினம் வருடா வருடம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த முறை அதன் 10ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைத்துப் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும். அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இடம்பெற்று வருகின்றன.

பெரும் எடுப்பில் முன்னெடுக்க ஏற்பாடாகிய இந்த 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டு அமைதியான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *