இலங்கையில் பிள்ளைகளைப் பறிகொடுத்த டென்மார்க் தம்பதி உருக்கமான அறிக்கை!

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், தங்களது மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த டென்மார்க்கைச் சேர்ந்த கோடீஸ்வர தம்பதி, உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

டென்மார்க்கைச் சேர்ந்த கோடீஸ்வரத் தொழிலதிபரான அன்டர்ஸ் ஹோல்ச் மற்றும் அன்னி தம்பதிகளின் மூன்று பிள்ளைகளான அல்மா (வயது – 15), அக்னீஸ் (வயது – 12) மற்றும் அல்பிரட் (வயது – 05) ஆகிய மூவருமே உயிரிழந்தனர்.

இந்தநிலையில், பிள்ளைகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு, ஆறுதலான வார்த்தைகளைக் கூறி மனதைத் தேற்றியவர்களுக்கு, நன்றி என்று கூறியே, அந்தத் தம்பதி, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“எங்கள் மூன்று பிள்ளைகளை இழந்த பின்னர் எங்களுக்குக் கிடைத்த இரங்கல்கள், அனுதாபங்கள் மற்றும் மனதைத் தேற்றும் வார்த்தைகளுக்கு, நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூறப்பட்ட பல வார்த்தைகள், எங்கள் இதயத்தைத் தொட்டன. இலங்கைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் எங்களின் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களது மூன்று குழந்தைகளின் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருக்கும்” என்று அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *