நீர்கொழும்பிலிருந்து வவுனியா வந்த 35 வெளிநாட்டு அகதிகள்!
நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு அகதிகளில் 35 பேர் வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமை வந்தடைந்தனர்.
நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து அகதி, அந்தஸ்து கோரிய நிலையில் நீர்கொழும்பில் வசித்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 வரையிலான அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனையடுத்து அந்த மக்களை வேறு பகுதிகளில் தங்க வைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான் பிரஜைகள் 19 பேர் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் 16 பேர் என மொத்தமாக 35 வெளிநாட்டுப் பிரஜைகள் நீர்கொழும்பிலிருந்து அழைத்து வரப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.