எனது உயிருக்கும் ஆபத்து; அதை இழக்க நான் தயார்! – பேராயர் அதிர்ச்சி அறிவிப்பு
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்த கொழும்பு மாவட்டப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, தனது உயிரை எப்போது வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயாராக உள்ளார் எனவும் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விசேட ஆராதனை நிகழ்வு நேற்று கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. அங்கு ஆராதனையின் பின்னர் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று உரிய அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் பதவி விலக வேண்டும்.
இந்தத் தாக்குதல் சம்பவங்களில் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒன்றும் தெரியாதது போல இருந்தாலும் – அவர்கள் கடவுளிடத்தில் ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது” – என்றார்.