சகோதரிகளின் சலூனில் ‘ஷேவிங்’ செய்த சச்சின்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சலூன் கடை நடத்தி வரும் சகோதரிகளின் கடைக்குச் சென்ற சச்சின் டெண்டுல்கர், அவர்களது கடையில் ஷேவிங் செய்து கொண்டதோடு அவர்களுக்கு நிதியுதவியும் செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பன்வாரி தோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் நேஹா மற்றும் ஜோதி. சலூன் கடை ஒன்றை நடத்தி வந்த அவர்களது தந்தை . கடந்த 2014ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரால் கடையினை நடத்த இயலாத காரணத்தினால், நேஹா, ஜோதி இருவரும் அந்த சலூன் கடையை தங்கள் பொறுப்பில் எடுத்து நடத்தத் தொடங்கினார்.

தங்களது கடைக்கு பார்பர்ஷாப் கேர்ள்ஸ் என்ற பெயர் சூட்டி அவர்கள் சலூனை நடத்தத் தொடங்கினார்கள். இப்போது சகோதரிகள் இருவரும் சலூனை நடத்தி வருகிறார்கள். சலூன் வருமானத்தின் மூலமாகத்தான் தந்தையின் சிகிச்சை செலவு மற்றும் குடும்ப செலவுகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில், சலூன் கடை நடத்தி வரும் சகோதரிகளின் கடைக்குச் சென்ற சச்சின் டெண்டுல்கர், அவர்களது கடையில் ஷேவிங் செய்து கொண்டதோடு அவர்களுக்கு நிதியுதவியும் செய்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நேஹா மற்றும் ஜோதி நடத்தி வரும் சலூனுக்குச் சென்ற சச்சின் டெண்டுல்கர் அங்கு முகச்சவரம் செய்து கொண்டார். மூத்த சகோதரியான நேஹா முகச்சவரம் செய்தார். அத்துடன் சச்சின் விளம்பரத் தூதுவராக இருக்கும் ஜில்லெட் நிறுவனம் சார்பில் சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி, தொழில் தேவைக்கான நிதியுதவியை சச்சின் அவர்களிடம் வழங்கினார்.

அங்கு ஷேவிங் செய்து கொண்டபோது எடுத்த படத்தை சச்சின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். அது தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *