யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரை திடீரென நீக்கினார் மைத்திரி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பல்கலைக்கழகப் பதிவாளருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் கடந்த 30ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போராசிரியர் இ.விக்னேஸ்வரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த விடயம் தொடர்பாக நான் அறிந்துள்ளேன். எனினும், அந்தக் கடிதம் இன்னமும் எனது கைகளுக்குக் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார். அவர் தான் கொழும்பில் தங்கி நிற்பதாகவும் கூறினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனுக்கு முகவரியிடப்பட்டு, கடந்த மாதம் 30ஆம் திகதி கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கின்றபோதும், இன்றுதான் தொலைநகல் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்பட்டது என்றும், பேராசிரியர் இ.விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *