ஐ.எஸ். தாக்குதல் குறித்து 5 நாட்களுக்கு முன்னரே எச்சரித்த சவுதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சினால் இலங்கைக்கான சவுதி தூதரகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் அப்துல் ஹசீஸ் அல் அசாஃப்-இனால் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் அப்துல் நாசர் அல் ஹரேதிக்கு குறித்த இரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லெபனானின் அல்-அஹெட் செய்தி இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாக குறித்த இரகசியக் கடிதத்தை மேற்கோள் காட்டி அல்-அஹெட் செய்தி இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதரகத்தில் காணப்படும் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு உறுப்பினர்கள், குழுக்கள் தொடர்பான ஆவணங்கள், கணினி தரவுகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அழிக்குமாறு குறித்த இரகசிய கடிதத்தில் முதலாவது விடயமாக குறிப்பிடப்பட்டிருந்ததாக லெபனானின் அல்-அஹெட் செய்தி இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் அதிகளவில் சஞ்சரிக்கும் மதஸ்தலங்கள் போன்ற இடங்களை எதிர்வரும் சில நாட்களுக்கு தவிர்க்குமாறும், விசேடமாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் மக்கள் அதிகளவில் சஞ்சரிக்கும் இடங்களுக்கு செல்லாதிருக்குமாறும்

இலங்கைக்கான சவுதி தூதரகத்தின் பாதுகாப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறும் குறித்த கடிதத்தில் 2-ஆவது விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அதிகாரிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் எழுத்து மூலம் சவுதியின் வௌிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறும் குறித்த கடிதத்தில் மூன்றாவது விடயமாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்புலத்தில் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் தமது நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் இலங்கையில் இருந்து வௌியேறுமாறு சவுதி அரேபியத் தூதரகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *