கொழும்பில் ஐ.எஸ். தாக்குதலில் 6 இந்திய அரசியல்வாதிகள் பலி!

கொழும்பில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் நடத்திய தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 6 இந்திய அரசியல்வாதிகள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில முதலமைச்சர் எம்.டி.குமாரசுவாமி தகவலுக்கு அமைய இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு ஷங்கிரி – லா ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின்போது 6 அரசியல்வாதிகளும் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தின் பிரதான கட்சியைச் சேர்ந்த 4 அரசியல் பிரபலங்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஷங்கிரி – லா ஹோட்டலின் உணவகத்தில் இருந்த லக்ஷ்மன் கோவிந்தா ரமேஷ், கே.லக்ஷ்மி நாராயணன், எம்.ரங்கராஜா மற்றும் கே.ஜீ.ஹமுத்த ரங்கப்பா ஆகியோரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.நாகராஜ் மற்றும் சிவகுமார் ஆகியோரும் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், குறித்த அரசியல்வாதிகள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் கர்நாடகா மாநிலத்தின் அரசியல்வாதிகள் சிலர் காணாமல்போயுள்ளனர் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *