தனியார் இரும்புக்கம்பி தொழிற்சாலையிலிருந்து 800 பீரங்கி ரவைகள் மீட்பு!
ஜாஎல – ஏக்கல பிரதேசத்திலுள்ள தனியார் இரும்புக் கம்பி தொழிற்சாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சுமார் 800 பீரங்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், ரி – 56 ரக துப்பாக்கிக்கான நூற்றுக்கும் அதிக ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு மஹரகம பிரதேசத்திலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது.
நேற்றிரவு 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது இராணுவத்தினருடன் மஹரகம பொலிஸாரும் இணைந்துகொண்டனர்.
குறித்த வீட்டிலிருந்து இராணுவத்தின் சீருடையை ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மஹரகம பிரதேசத்தில் ஆடை விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒருவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பலப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கத்தி மற்றும் பிக்குகள் அணியும் ஆடைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.