சஹ்ரானின் மனைவி, மகளை பார்க்கச் சென்ற அரசியல்வாதி! – தடுத்துநிறுத்தியது வைத்தியசாலை நிர்வாகம்
இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை அரசியல்வாதி ஒருவர் நேரில் சென்று பார்வையிட முயன்றுள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸாருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர். இதில் சஹ்ரான் ஹாசீமின் சொந்தங்கள் உட்பட 15 பேர் பலியாகினர். ஆனால், அவரின் மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோரை காயங்களுடன் பாதுகாப்புத் தரப்பினர் மீட்டனர். அவர்கள் இருவரும் அம்பாறை வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், குறித்த இருவரையும் பார்ப்பதற்காக அரசியல்வாதி ஒருவர் அம்பாறை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். எனினும், அம்பாறை வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக குறித்த அரசியல்வாதி திருப்பிச் செல்ல நேரிட்டது என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.