சம்மாந்துறையில் தேடுதல் வேட்டை! ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு!!
சம்மாந்துறையில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின்போது ஒரு தொகை வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சுமார் 200 ஜெலட்னைட் குச்சிகளும், ரி – 56 ரக துப்பாக்கிகள் மூன்றும், டெட்டனேட்டர்களும், கைத்துப்பாக்கிகள் இரண்டும், வாள்களும் மற்றும் சீருடைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்து சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பாழடைந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சம்மாந்துறையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றின் படங்களை ‘நியூஸ் பெஸ்ட்’ வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அட்டாளைச்சேனை – பாலமுனை கடற்கரை பகுதியிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உதிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைத் தேடி நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.